ஷா ஆலம், ஆக 27- மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டமான சிலாங்கூர் சாரிங் இன்று இரு இடங்களில் நடத்தப்படுவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா, ஸ்ரீ மஞ்சா சமூக மண்டபம் மற்றும் கிளானா ஜெயா பி.கே.என்.எஸ். மண்டபம் ஆகிய இடங்களில் அந்த மருத்துவ முகாம் நடைபெறுவதாக டாக்டர் சித்தி மரியா மாமுட் சொன்னார்.
இந்த பரிசோதனை இயக்கம் காலை மணி 9.00 தொடங்கி மாலை 3.00 மணி வரை நடைபெறும். இந்த பரிசோதனையில் பங்கேற்க விரும்புவோர் செலங்கா செயலியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார் அவர்.
உடலாரோக்கியம் விலை மதிப்பில்லாதது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நோய்களை முன்கூட்டியே தடுப்பது சிறந்த நடவடிக்கை என்பதால் இனியும் காத்திராமல் அனைவரும் விரைந்து இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் நாளை ஞாயிற்றுக் கிழமை ஸ்ரீ குண்டாங், கம்போங் மிலாயு சமூக மண்டபத்திலும் சுபாங் ஜெயா காம்ப்ளெக்ஸ் 3கே எம்.பி.எஸ்.ஜே. மண்டபத்திலும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்திற்காக மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோய்ப் பின்னணி உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்களை இலக்காக கொண்டு இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் நடத்தப்படுகிறது.