சுபாங் ஜெயா செப் 4- மாநில அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “இன்சான்“ எனப்படும் சிலாங்கூர் ஆயுள் காப்புறுதி திட்டம் சிலாங்கூர் பிரஜைகளாக இருப்பதற்கு தனிச் சிறப்பைத் தரக்கூடிய திட்டமாக விளங்குகிறது.
இத்தகைய திட்டங்கள் காரணமாக மேலும் அதிகமானோர் சிலாங்கூர் நோக்கி படையெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அரசு ஊழியரான நோர் நேர்வரினி ஜஹாரி (வயது 42) கூறினார்.
இப்போது கூட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல வருமானம் தேடி சிலாங்கூருக்கு வருகின்றனர். இந்த அறிவிப்பின் காரணமாக மேலும் அதிகமானோர் இங்கு வரக்கூடும் என்று அவர் சொன்னார்.
இந்த திட்டம் சிலாங்கூர் அரசுக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. இதன் மூலம் மாநிலம் தொடர்ந்து மேம்பாடு காண்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த இன்சான் திட்டம் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் சுய காப்புறுதி பாதுகாப்பைக் கொண்டிருப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்று பொறியியலாளரான ஹிஸ் ஹரிஸ் ஹருண் (வயது 53) தெரிவித்தார்.
காப்புறுதி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு திட்டமாக விளங்கினாலும் நிதிக் கடப்பாடு காரணமாக பலர் அந்த பாதுகாப்பை பெறாமலிருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரை சேர்ந்த சுமார் 60 லட்சம் பேருக்கு இலவச காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 30 ஆம் தேதி கூறியிருந்தார்.