குவாந்தான், செப் 10- கிழக்கு கரை நெஞ்சாலையின் குவாந்தான் நோக்கிச் செல்லும் தடத்தின் 67.4வது கிலோ மீட்டரில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.
சாலையில் விழுந்து கிடந்த மரத்தின் மீது முகமது முஸதாகின் நோர் அஸாரி (வயது 21) என்ற இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கனி கூறினார்.
நேற்றிரவு 7.17 மணியளவில் இச்சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த பத்து பேரடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
மரத்தின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்ட முகமது முஸதாகினை தீயணைப்பு வீர்ர்கள் மீட்டனர். சம்பவ இடத்திலிருந்த மருத்துவ குழுவினர் மேற்கொண்ட சோதனையில் அவ்வாடவர் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.
காராக், தாமான் ஹீஜாவ் எனுமிடத்தைச் சேர்ந்த அந்த இளைஞரின் உடல் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.