ஷா ஆலம் செப் 14- மாநில அரசு அமல்படுத்தியுள்ள ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டம் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமையை குறைக்க உதவும்.
அடிப்படை உணவுப் பொருள்களை மாநில மக்கள் உயர்ந்த தரத்திலும் சந்தையை விட குறைவான விலையிலும் வாங்குவதற்குரிய வாய்ப்பினை இந்த மலிவு விற்பனைத் திட்டம் ஏற்படுத்துவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலத்தில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பதையும் மாநில அரசின் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கெஅடிலான் ராக்யாட் கட்சி முன்பு தொடங்கி இப்போது வரை அனைத்து தரப்பினரின் பிரச்னைகளையும் தீர்ப்பதில் அக்கறை செலுத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.
கடந்த ஆகஸ்டு 31 தொடங்கி டிசம்பர் 31 வரை மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த மலிவு விற்பனையை மாநில அரசு நடத்தி வருகிறது.
பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனைத் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 80,000 பேர் வரை பயனடைந்துள்ளனர்.