ஷா ஆலம், செப், 16- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் ஸ்ரீ செத்தியா தொகுதியிலுள்ள வசதி குறைந்த 600 பேர் ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகையைப் பெறுகின்றனர்.
மாதம் 300 வெள்ளி வீதம் வழங்கப்படும் இந்த உதவித் தொகை அத்தரப்பினரின் மாதாந்திர குடும்பச் செலவினத்தை ஓரளவு குறைக்க உதவும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார். அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தினருக்கு இந்த இந்த திட்டம் பெரிதும் பயன்தரக் கூடியதாக இருக்கும். இது வரை 200 குடும்பங்கள் இத்திட்டத்தின் வழி பயன்பெற்று வருகின்றன என்றார் அவர்.
இத்தொகுதியில் வசதி குறைந்தவர்கள் அதிகமாக உள்ளதால் இத்திட்டத்தில் மேலும் 200 பேருக்கு வாய்ப்பளிக்கும்படி மந்திரி பெசாரைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதம் அறிமுப்படுத்தப்பட்ட இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 44 மக்கள் நலத் திட்டங்களில் பிங்காஸ் திட்டமும் ஒன்றாகும். பத்து கோடியே 80 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் வழி 30,000 குடும்பங்கள் பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.