அம்பாங் ஜெயா, செப் 18- மாநிலத்தின் ஒன்பது இடங்களில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) நடத்தி வரும் ஜூவாலான் ஏசான் ரக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 216,000 வெள்ளி மதிப்புள்ள அத்தியாவசிய பொருள்கள் விற்பனையாகின்றன.
அனைத்து இடங்களிலும் தலா 300 என்ற எண்ணிக்கையில் விற்பனைக்கு வைக்கப்படும் ஆறு விதமான உணவு மூலப் பொருள்களின் அடிப்படையில் இந்த தொகை பெறப்பட்டதாக அக்கழகத்தின் உயர் சந்தை நிர்வாகி முகமட் ஃபசீர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
ஒவ்வொரு இடத்திற்கும் தலா 300 என்ற எண்ணிக்கையில் உணவு மூலப் பொருள்களை கொண்டு வருகிறோம். இந்த பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும் பட்சத்தில் மொத்தம் 24,000 வெள்ளி விற்பனையை பதிவு செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
வழக்கமாக அனைத்து பொருட்களும் தீர்ந்துவிடும். ஒவ்வொரு இடத்திலும் விற்பனையின் முடிவில் அதிகபட்சமாக சுமார் 20 முதல் 30 சமையல் எண்ணெய் பாட்டில்கள் எஞ்சியிருக்கும். கோழி, மீன், முட்டை, அரிசி, மாட்டிறைச்சி உள்ளிட்ட பொருட்கள் எப்போதும் விற்றுத் தீர்ந்துவிடும் என்றார் அவர்.
தாமான் அம்பாங் இண்டாவில் நேற்று நடைபெற்ற திட்டத்தை பார்வையிட்ட பிறகு முகமட் ஃபசீர் சிலாங்கூர்கினியிடம் இதனைக் கூறினார்.