ஷா ஆலம், செப்டம்பர் 19– இருபதாவது மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) பங்கேற்கும் சிலாங்கூர் விளையாட்டு வீரர்கள் புத்துணர்வுடனும் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்று வருவதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கிய விளையாட்டுப் போட்டிகளின் போது வீரர்கள் வெளிப்படுத்திய ஆட்டத்திறன் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் சொன்னார்.
அவர்கள் உத்வேகம் சிறப்பாக உள்ளது. மேலும், தளவாடங்கள் போன்ற மற்ற விஷயங்களும் சிறப்பாக உள்ளன. தங்கப் பதக்கம் தவிர்த்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுத் தந்தனர் என்று சிலாங்கூர் அணியின் தலைவருமான அவர் தெரிவித்தார்.
சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவர்களின் உடலாரோக்கியம் திருப்திகரமாக உள்ளது. எல்லாம் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதோடு அவர்கள் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துகிறார்கள் என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
செப்டம்பர் 16 முதல் 24 வரை ஆம் தேதி வரை நடைபெறும் 20வது சுக்மா போட்டியில் 40 தங்கம், 40 வெள்ளி மற்றும் 45 வெண்கலப் பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.
20வது சுக்மாவில் இடம் பெற்றுள்ள 30 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 490 விளையாட்டு வீரர்கள் மற்றும் 75 பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
சிலாங்கூர் இப்போது ஏழு தங்கம், 17 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலப் பதக்கங்களை வென்று ஏழாவது இடத்தில் உள்ளது.