ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கொள்ளையர்கள், அடக்குமுறையாளர்கள் இடமிருந்து நாட்டை காக்கும் தருணம் வந்து விட்டது- அன்வார்

ஷா ஆலம், அக் 11- தங்கள் குடும்பத்தினரையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருக்கும் கொள்ளையர்கள் மற்றும் அடக்குமுறையாளர் களிடமிருந்து பக்கத்தான் ஹராப்பான் நாட்டைக் காக்கும்  தருணம் வந்து விட்டது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அந்த கூட்டணி தயாராக உள்ளதோடு கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் கொடுத்த ஆதரவை மீண்டும் பெறுவதற்கு தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

வளமான எதிர்காலம்  மற்றும் சுபிட்சத்தையும் மக்கள் நலன் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாலும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வசமிருக்கும் சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்படாது என்று அந்த எதிர்க்கட்சி கூட்டணி கடந்த 5 ஆம் தேதி அறிவித்திருந்தது.


Pengarang :