கோலாலம்பூர், அக் 11- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பார்வையாளர்களாக செயல்பட விரும்புவோர் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அமைப்பை பிரதிநிதிக்கக்கூடிய இந்த பார்வையாளர் விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார். வேட்பாளர் நியமன செயல்முறை, பிரச்சாரம், முன்கூட்டியே வாக்களிப்பது, வாக்களிக்கும் செயல்முறை மற்றும் வாக்கு எண்ணுதல் மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவது வரையிலான தேர்தல் செயல்முறைகளை கண்காணிக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.spr.gov.my/ என்ற தேர்தல் ஆணைய அகப்பக்கத்தை பார்வையிடலாம். பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக நேற்று அறிவித்தார்.