சபாக் பெர்ணம், அக்16 - சபாக் பெர்ணம் பகுதியின் (சப்டா) வளர்ச்சி இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சிறந்த வசிப்பிட சூழலுக்கு இத்திட்டம் உத்தரவாதம் அளிக்கும் அதேவேளையில் விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருளாதார வாய்ப்புகளையும் திறக்கும் என்று அவர் சொன்னார். அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில், சபாக் பெர்ணத்தின் அந்தஸ்து மாவட்ட மன்ற நிலையிலிருந்து இருந்து நகராண்மைக் கழகத்திற்கு உயர்வு காணும். நாங்களும் நடப்பு அரசாங்கத்தைத் தொடர்வோம் என்று அவர் இம்மாவட்டத்திற்கான சிலாங்கூர் பென்யாயாங் பயணத்திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். முதல் சிலாங்கூர் திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படவிருக்கும் மாவட்டத்தின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சித் திட்டமான சப்டாவை அமிருடின் பின்னர் தொடக்கி வைத்தார். தனியார் மற்றும் அரசு துறைகளை உள்ளடக்கிய இத்திட்டம் 1,900 கோடி வெள்ளி முதலீடுகளை சம்பந்தப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 4,000 வேலை வாய்ப்புகளையும் ஆண்டுக்கு 24.6 கோடி ரிங்கிட் வருமானத்தையும் ஈட்டும் சாத்தியம் உள்ளதாக கருதப்படுகிறது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/10/MB-Sarapan3-960x583.jpg)