கோலாலம்பூர், அக் 26- தேர்தலுக்கு முன்னதாக பல வங்களாதேசிகளுக்கு அடையாளக் கார்டு (மைகாட்) வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலம் பரவி வரும் தகவல்களை தேசிய பதிவுத் துறை மறுத்துள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் தகுதியான மலேசிய குடிமக்களுக்கு மட்டுமே மைகாட் வழங்கப்படுவதாகவும் அத்துறை அறிக்கை ஒன்றில் தெளிவுபடுத்தியது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வங்களாதேசிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மைகாட் ஒன்றின் படம் உண்மையல்ல என்பதை ஜே.பி.என். தெளிவுபடுத்த விரும்புகிறது. மாறாக, அவர் ஒரு சட்டபூர்வமான மலேசிய குடிமகன் ஆவார். அவர் சீனக் குடும்பத்தால் சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்டு பிறப்பிலிருந்தே வளர்க்கப்பட்டார். உண்மையில் அந்த நபர் மலேசிய குடிமகன்தான். ஊடகங்களால் இந்த விவகாரம் பெரிதாக்கக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தேசிய பதிவுத் துறையின் நன்மதிப்பைக் கெடுப்பதோடு அதன் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் இவ்விவகாரம் தொடர்பில் 23 ஆம் தேதி போலீசில் புகார் செய்யப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது. பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பும் எந்த தரப்பினர் மீதும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கை வெளியிடப்படுவதாகவும் அத்துறை தெளிவுபடுத்தியது. எந்தவொரு தகவலையும் பகிரும் முன் அதன் நம்பகத்தன்மையை பொது மக்கள் சரி பார்க்க வேண்டும். தவறான தகவலைப் பரப்பும் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜே.பி.என். எச்சரித்துள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/04/JPN.jpg)