கோம்பாக், நவ 2- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான அத்தியவசியப் பொருள் மலிவு விற்பனை இன்று தொடங்கி வரும் நவம்பர் 17ஆம் தேதி வரை கோம்பாக்கில் நடைபெறும்.
வட்டார மக்களிடமிருந்து கிடைத்து வரும் அமோக ஆதரவு காரணமாக இந்த மலிவு விற்பனை வெள்ளிக்கிழமை தவிர்த்து இதர நாட்களில் தொடர்ச்சியாக நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) உதவி நிர்வாக முகமது ஹஸ்ரி அபு ஹசான் கூறினார்.
கோம்பாக் வட்டார மக்களின் அத்தியாவசியப் பொருள் தேவையை நிறைவு செய்வதற்காக இப்பகுதியில் 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக மலிவு விற்பனையை பி.கே.பி.எஸ். நடத்தும் என அவர் குறிப்பிட்டார்.
ஆகவே. வட்டார மக்கள் குறிப்பாக கோழி மற்றும் முட்டையை வாங்க விரும்புவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விரைந்து வந்து அவற்றை வாங்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். காரணம், இந்த விற்பனையில் விரைவாக விற்றுத் தீர்க்கும் உணவு பொருள்களாக கோழியும் முட்டையும் விளங்குகின்றன என்றார் அவர்.
முன்பு இந்த விற்பனை நிகழ்வு மாநிலத்திலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நடைபெற்று வந்தது.
இந்த விற்பனைத் திட்டத்தில் கோழி 10.00 வெள்ளி விலையிலும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளி விலையிலும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளி விலையிலும் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளி விலையிலும் விற்கப்படுகிறது.
இவை தவிர 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00க்கும் அரிசின் 5 கிலோ 10.00 வெள்ளிக்கும் கிடைக்கும்.
சிலாங்கூர் மாநில அரசு கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி வரை 56 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 160 இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்தி வருகிறது.