புத்ராஜெயா, நவ 5- மலேசியாவில் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான ஜனநாயக நடைமுறை இன்று தொடங்கியது. அந்த நடைமுறையின் ஒரு பகுதியாக வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வு இன்று காலை 9.00 மணி தொடங்கி நாடு முழுவதும் உள்ள 222 வேட்பு மனுத்தாக்கல் மையங்களில் நடைபெறுகிறது.
இந்த பொதுத் தேர்தலுடன் சேர்த்து சபா மாநிலத்தின் புகாயா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும் இன்று நடைபெறவுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக அமல் படுத்தப்பட்ட அவசரகாலத்தின் எதிரொலியாக இந்த இடைத் தேர்தல் இதுநாள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு வரும் நவம்பர் 15ஆம் தேதியும் வாக்களிப்பு வரும் 19ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று தொடங்கி 14 நாட்களுக்கு நடைபெறும். வரும் 18 ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.
இந்த தேர்தலில் நாட்டிலுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 116 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமான கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடுவதால் அனைத்து தொகுதிகளிலும் பலமுனைப் போட்டி நிலவுவதற்குரிய சாத்தியம் அதிகமாக உள்ளது.
இம்முறை பேராக், பகாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. பக்கத்தான் ஹராப்பான் வசமிருக்கும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களும் பாஸ் கட்சி வசமிருக்கும் கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களும் ஐந்தாண்டு தவணை முழுமையாக முடியும் வரை தேர்தலை நடத்துவதில்லை என முடிவெடுத்துள்ளன.