ஷா ஆலம், நவ 21- நாடு முழுவதும் சுமார் 8,000 பேர் ஹலால் சான்றிதழ் வைத்திருக்கும் நிலையில் அவர்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
மாநிலத்தில் உள்ள அந்த ஐயாயிரம் பேரில் சுமார் 70 விழுக்காட்டினர் முஸ்லீம் அல்லாதோராவர் என்று ஹலால் தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
நாட்டில் ஹலால் சான்றிதழ் வைத்திருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் பொருளாகும். அதில் பெரும்பாலோர் முஸ்லீம் அல்லாதோர் என்பதும் இதில் கவனிக்க வேண்டிய விஷயமாகும் என்று அவர் சொன்னார்.
முஸ்லீம் வணிகர் நாசி லெமாக் விற்றால் ஹலால் சான்றிதழ் உள்ளதா என்று அவரிடம் யாரும் கேட்கமாட்டார்கள். காரணம், அவர்கள் விற்பது ஹலால் உணவு என்ற நம்பிக்கையே காரணம். எனினும், மாமாக் கடைக்குச் சென்றால் நிச்சயம் இந்த கேள்வியைக் கேட்பார்கள் என்றார் அவர்.
வாடிக்கையாளர்கள் சந்தேகம் கொள்ளாதிருப்பதற்கு ஏதுவாக மாமாக் உணவக நடத்துநர்களும் ஹலால் சான்றிதழை வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் தாங்கள் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில் யாயாசான் ஹிஜ்ரா தொழில் முனைவோருடன் நடத்திய கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.