ஷா ஆலம், நவ 22- அண்மைய காலமாக அவநம்பிக்கையும் சுய நலமும் கொண்ட சில தரப்பினரில் தூபம் போடப்படும் இனவாத கோஷங்கள் குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்துள்ளார்.
பொறுப்புணர்வும் நிலைத்தன்மையும் கொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் இத்தகைய செயல்கள் நடைபெறக் கூடாது என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான அவர் சொன்னார்.
மலாய், சீன, இந்திய, பூர்வக்குடி, சபா மற்றும் சரவா பழங்குடியினர் அனைவரும் அமைதியை விரும்பும் மலேசியர்கள் என்ற முறையில் நமது சகோதரர்கள் என்பதால் நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் குழப்பம் ஏற்பட வழிவகுக்கக்கூடிய இத்தகைய செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லாவின் அறிக்கையை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
நடந்து முடிந்த பதினைந்தாவது பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் சூழல் உருவாக்கியுள்ளது.