கிள்ளான், டிச 4- மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மட்டுமின்றி அவர்களின் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு சிலாங்கூர் டானாசிஸ்வா வேலை வாய்ப்புத் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பங்கேற்பாளர்களுக்கு வேலை வாய்ப்புகளோடு அவர்களின் திறனை மேம்படுத்துவதற்குரிய சில திட்டங்களும் இந்த முன்னெடுப்பின் மூலம் அமல்படுத்தப்படும் என்று சிலாங்கூர் சிஸ்வா சிஸ்வி சமூக நல அமைப்பின் தலைவர் ரசாக் அலி கூறினார்.
இத்திட்டத்தில் பங்கு கொள்ளும் நபர்களுக்கு பயிற்சியையும் வேலைக்கான உத்தரவாதத்தையும் வழங்கும் வகையில் நிறுவனங்களுடன் நாங்கள் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வோம் என அவர் விளக்கினார்.
இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ளோர் தகுதி உள்ளிட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவர் என்று இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் டானாசிஸ்வா வேலை வாய்ப்புத் திட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்த டானாசிஸ்வா திட்டத்திற்காக சிஸ்வா சிஸ்வி சமூக நல அமைப்பிடம் 19,750 வெள்ளியை சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் ஒப்படைத்தார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் 75 பேர் வாகனத் தொழில்துறையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பினை பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெறுவர்.
இந்த நிகழ்வில் உணவு பட்டுவாடா தொழிலில் ஈடுபட ஆர்வமுள்ளோர் மோட்டார் சைக்கிளுக்கான முன்பண உதவியை பெறுவதற்கான பைக்கேர் 1000 எனும் விண்ணப்ப முகப்பிடமும் திறக்கப்பட்டது.