ஷா ஆலம், டிச 6- பேராக் மாநிலத்தின் தைப்பிங்கையும் பந்திங்கையும் இணைக்கும் மேற்கு கரை நெடுஞ்சாலை (டபள்யு.சி.இ.) வரும் 2025ஆம் ஆண்டு பூர்த்தியாகும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
சுமார் 504 கோடியே 40 லட்சம் வெள்ளி செலவிலான இந்த 233 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை இவ்வாண்டு செப்டம்பர் 25ஆம் தேதி வரை 82.51 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த நெடுஞ்சாலையின் அனைத்து பிரிவுகளும் வரும் 2025ஆம் ஆண்டில் பூர்த்தியடையும். தஞ்சோங் காராங் சந்திப்பு வரையிலான பகுதியை உள்ளடக்கிய 7ஆம் பிரிவு இந்நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் இறுதிப் பகுதியாக விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று டபள்யூ.சி.இ. நெடுஞ்சாலையின் நிலை குறித்து சுங்கை பாஞ்சாங் உறுப்பினர் டத்தோ முகமது இம்ரான் தம்ரின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்தாண்டில் முழுமையாகப் பூர்த்தியாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காரணமாக கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது என அவர் விளக்கினார்.
மொத்தம் 21 சாலைச் சந்திப்புகளைக் கொண்ட இந்த நெடுஞ்சாலை தென் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை, கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, வடக்கு செலாட் கிளாங் நெடுஞ்சாலை, கோலாலம்பூர்-கோல சிலாங்கூர் நெடுஞ்சாலை ஆகியவற்றுடன் இணைப்பைக் கொண்டுள்ளது.