ஷா ஆலம், டிச 16- ஜாலான் கெந்திங்-பத்தாங் காலியில் இன்று விடியற்காலை நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை தேடி மீட்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் ஊராட்சி மன்றங்களை மாநில அரசு ஈடுபடுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை துரிதகதியில் மேற்கொள்ளப்படுவதோடு மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியும் அங்கு மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்க படுவதற்கும் அவர்கள் எந்த பாதிப்பும் இன்றி நலமுடன் உயர்த்தப்புவதற்கும் நாம் இறைவனைப் பிரார்த்திப்போம் என அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இதனிடையே, கோதோங் ஜெயா இயற்கை விவசாய பண்ணைக்கு அருகே நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.
கோதோங் ஜெயா, ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் இயற்கை விவசாய பண்ணைக்கு அருகே இன்று விடியற்காலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் போது அங்கு கூடாரம் இட்டு தங்கியிருந்தவர்களில் அந்த சிறுவனும் அடங்குவான்.
சம்பவம் நிகழ்ந்த போது அந்த இடத்தில் 79 பேர் இருந்ததாகவும் அவர்களில் 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராசாம் காமீஸ் முன்னதாக கூறியிருந்தார்.