ஷா ஆலம், டிச 24- ரோடா டாருள் ஏசான் திட்டம் (நாடி) கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது முதல் இதுவரை மோட்டார் சைக்கிள் மூலம் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 6,500 மின்-அழைப்பு பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
சிலாங்கூரில் உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 15,000 பேரில் கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காட்டினரை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 14,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த நாடி திட்டத்தின் இவ்வாண்டிற்கான இறுதி நிகழ்வை இன்று நடத்தினோம். அதில் ஊழியர் சேம நிதித் திட்டத்தில் கணக்கு திறப்பதற்காக வெ.500 மற்றும் வெ.50 வழங்குவது உள்ளிட்ட உதவிகள் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டன என்றார் அவர்.
இந்த திட்டத்திற்கு இவ்வாண்டில் மட்டும் 6,200 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக கூறிய அவர், மக்களின் நலனை காப்பதற்கான திட்டங்களை அமல்படுத்துவது குறித்து மாநில அரசு எப்போதும் சிந்தித்து வருகிறது என்றார்.
இன்று இங்கு நடைபெற்ற ரைட் திட்ட பங்க்கேற்பாளர்களுக்கு உதவிகளை வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் இத்தகைய மின் அழைப்பு சேவைக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்கும் நோக்கில் மாநில அரசு “ரைட்“ திட்டத்தை அமல்படுத்தியதாக அமிருடின் சொன்னார்.
முதலாம் ஆண்டில் இத்திட்ட பங்கேற்பாளர்களுக்கு மோட்டார் சைக்கிளோட்டுவதற்கான லைசென்ஸ் பெற உதவினோம். இப்போது அனைவரும் லைசென்ஸ் பெற்றுள்ளதால் வேறு விதமான உதவிகளை அவர்களுக்கு வழங்கி வருகிறோம் என்றார் அவர்.