கோல லங்காட், ஜன 1- தஞ்சோங் சிப்பாட் சட்ட மன்றத் தொகுதியில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதுவரை சிலாங்கூர் பொதுக் காப்பறுதித் திட்டத்தில் (இன்சான்) பதிவு செய்துள்ளனர். சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் 10,000 வரையிலான இந்த இலவச காப்புறுதித் திட்டத்தை மக்கள் வரவேற்பதாகவும் அந்த காப்புறுதித் தொகை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தொகுதி உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா கூறினார். நாங்கள் கிராமத் தலைவர்கள் மற்றும் சீன சமூகப் பிரதிநிதிகள் மூலம் இன்சான் திட்டத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பி வருகிறோம். மேலும், இத்திட்டம் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்துவதில் ஊராட்சி மற்ற உறுப்பினர்களும் பங்கு வகிக்கிறார்கள் என்று அவர் சொன்னார். தகவல் தொழில்நுட்ப ஆற்றல் இல்லாத மற்றும் விவேக கைப்பேசியைக் கொண்டிராத முதியோருக்கு உதவும் வகையில் தொகுதி நிலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் இன்சான் திட்டப் பதிவுக்காக சிறப்பு முகப்பிடங்களைத் தாங்கள் திறப்பதாக அவர் குறிப்பிட்டார் இங்குள்ள பந்தாய் பத்து லாவுட்டில் நேற்று நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். தஞ்சோங் சிப்பாட் தொகுதியிலுள்ள பூர்வக் குடியினர் உள்பட பிறந்து 30 நாட்கள் ஆன குழந்தைகள் முதல் 80 வயது வரை உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் திட்டத்தில் பதிவு செய்யப்படுவது உறுதி செய்யப்படும் என்றார். இன்சான் என்பது விபத்துக்கான குழு காப்பீட்டுத் திட்டமாகும். இதற்கான பிரீமியத் தொகை மாநில அரசால் முழுமையாக ஏற்கப்படுகிறது. மொத்தம் 6,000 கோடி வெள்ளி காப்பீட்டு மதிப்பைக் கொண்ட இத்திட்டத்தின் மூலம் நிரந்தர ஊனம் மற்றும் விபத்துகளால் ஏற்படும் இறப்புகளுக்கு 10,000 வெள்ளி வரையிலான காப்பீட்டுத் தொகையை பெற முடியும். இதற்கான பதிவிற்கு Wavpay பயன்பாட்டின் மூலம் AppStore, Google Play அல்லது Huawei App Gallery இல் பதிவிறக்கம் செய்யலாம். programinsan.com என்ற அகப்பக்கம் மூலமாகவும் இந்த இன்சான் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம்
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/01/JSP12-960x655.jpg)