கோலாலம்பூர், ஜன 3- சீனாவில் வெகு வேகமாக பரவி பிஏ.5.2 மற்றும் பிஎஃப்.7 ஆகிய இரு பிரதான கோவிட்-19 உருமாறிய திரிபுகள் மலேசியாவிலும் அடையாளம் காணப் பட்டுள்ளன. சீனாவில் கண்டறியப்பட்ட திரிபுகளில் இவ்விரு வகைகளும் சுமார் 80 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ளன.
இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் 4,148 பிஏ.5.2 தொற்று சம்பவங்களும் 7 பிஎஃப் 7 சம்பவங்களும் அடையாளம காணப்பட்டன என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
எனினும், இந்த பிஏ.5.2 மற்றும் பிஎஃப்.7 திரிபுகளுடன் தொடர்புபடுத்தக் கூடிய கடும் பாதிப்பைக் கொண்ட அல்லது மரணத்தை விளைவித்த சம்பவங்கள் தொடர்பான தரவுகள் தங்களிடம் இல்லை என அவர் சொன்னார்.
சீனாவில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் இந்த பிஏ.5.2 மற்றும் பிஎஃப்7 தொற்றுகளின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதாக நம்ப ப்படுகிறது என அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
நிலைமையை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். பொது சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான தீவிர மாற்றங்கள் அமல் செய்யப்படும் சூழல் ஏற்படும் பட்சத்தில் அதன் தொடர்பான அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவிக்கும் என்றார் அவர்..