ஷா ஆலம், ஜன 12- சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் உள்ள நூலகங்களை இவ்வாண்டில் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
நவீன பாணியை அடிப்படையாக கொண்ட இந்த நூலகங்களில் புதிய வடிவமைப்பு இட வசதியும் ஏற்படுத்தப்படும் என்று டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.
நூலகங்களை வெறும் வாசிக்கும் இடமாக மட்டுமின்றி காஃபே எனப்படும் சிற்றுண்டி மையம், ஜிமினேஸியம் மற்றும் மின்-விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பணி செய்யும் இடமாகவும் மாற்ற விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் அதிகமான இளைஞர்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக நூலகங்களில் மின்-விளையாட்டு வசதியையும் தாங்கள் ஏற்படுத்தவுள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று எம்.பி.எஸ்.ஜே. பேஸ்புக் வாயிலாக ஒளிரபரப்பப்பட்ட “சுபாங் ஜெயா காஃபி டாக்“ எனும் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வணிகர்களும் அங்காடி வியாபாரிகளும் தங்களின் தயாரிப்பு பொருள்களை சந்தைப் படுத்துவதற்கு உதவும் பொருட்டு உணவு விழாவை இவ்வாண்டில் நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விழாவை நடத்துவதற்கு பொருத்தமான இடங்களை அடையாளம் காணும்படி லைசென்ஸ் துறை பணிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.