ஷா ஆலம், ஜன 15- நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் விழாவை இன்று குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர். வீட்டு வாசலில் கோலமிட்டு கரும்பு, மாவிலை தோரண அலங்காரங்களோடு புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படையலிட்டு உற்றார் உறவினர்களோடு உண்டும் மகிழும் காட்சியை வீடுகள் தோறும் காண முடிகிறது.
இந்த பொங்கல் திருநாள் இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் வார விடுமுறையைப் பயன்படுத்தி பொது மக்கள் விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கரும்பு, பொங்கல் பானை, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அண்மைய சில தினங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தது.
பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் இன்று காலை பொங்கலிடும் நிகழ்வும் சிறப்பு பூஜைகளு நடைபெற்றன. ஆலயங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பண்பாட்டு விழாவாகவும் உழவர் திருநாளாகவும் விளங்கும் இந்த பொங்கல் விழா ஒவ்வோராண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.