ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கொள்ளைச் சம்பவத்தில் மூதாட்டி படுகொலை- ஜாசினில் சம்பவம்

ஜாசின், ஜன 20- இங்குள்ள கம்போங் பூலாய் டாராட்டிலுள்ள வீடொன்றில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தின் போது மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

விடியற்காலை 2.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தனியாக வசித்து வந்த மிசான முகமது அமின் (வயது 90) என்ற அந்த மூதாட்டி சமையலறையில் இறந்த கிடக்கக்காணப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விடியற்காலை 3.54 மணியளவில அண்டை வீட்டாரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாக ஜாசின் மாவட்ட இடைக்காலப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாட்சில் ஓத்மான் கூறினார்.

அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்தனர். அவரது உடல் பரிசோதனைக்காக ஜாசின் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்த ஆறு மணி நேரத்திற்குப் பின்னர் 20 வயது இளைஞரை சுற்றுவட்டாரத்தில் தாங்கள் கைது செய்ததாக அவர் மேலும் சொன்னார்.

வேலையில்லாத அந்த நபர் மீது கொள்ளை, திருட்டு தொடர்பில் மூன்று குற்றப்பதிவுகள் உள்ளதாகக் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :