ஷா ஆலம், ஜன 29- இங்குள்ள டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு தலைமையேற்ற மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களுடன் கலந்துறவாடி பெருநாள் மகிழ்ச்சியில் பங்கு கொண்டார்.
இந்த பொது உபசரிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை 3.00 மணி முதல் திரண்டிருந்த பொது மக்கள் மந்திரி புசாரை மகிழ்வுடன் வரவேற்றனர்.
பொது மக்கள் ஒன்றாகத் திரண்டு உணவுப் பதார்த்தங்களை ருசிப்பதற்கும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதற்கும் இந்த பொது உபசரிப்பு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக மந்திரி புசார் கூறினார்.
கோவிட்-19 சமயத்தில் நாம் சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பை கலைப்படைப்புகளை மட்டுமே மையமாகக் கொண்டு நடத்தினோம். ஆனால் இம்முறை விருந்துடன் கூடிய நிகழ்வாக படைக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் சுமார் 30 நிமிடங்களைச் செலவிட்ட மந்திரி புசார் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட உணவு கூடங்களுக்கும் வருகை புரிந்ததோடு சிறார்களின் வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் சீன எழுத்தோவிய கண்காட்சியையும் பார்வையிட்டார்.