படம், செய்திகள்,
சுப்பையா சுப்ரமணியம்
கோல சிலாங்கூர் . பிப்-5. இந்துக்கள் சமய முறைப்படி ஆற்றங்கரையில் தங்களது நேர்த்திக் கடனுக்காக அனைத்து பொருட்களையும் வைத்து முறையாக பூஜை நடத்தி பின்னர் பய பக்தியுடன் அதை எடுத்து சென்று முருக பெருமானுக்கு காணிக்கை செலுத்துவது நமது பண்பாடு..
இந்த சமய நெறியை முறையாக தொடங்கி வைத்து எடுத்து செல்ல எல்லா வகையிலும் உதவிகள் செய்து பக்தர்களை அனுப்பி வைக்கும் நற்சேவையை மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் கணேச கோட்டத்தின் தலைவரும் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவருமான ஜி.கெ.நடராசன், கடந்த 12 ஆண்டுகளாக கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய ஆற்றங்கரையில் செய்து வருகிறார்.
இவர் தனது தொண்டர்களுடன் ஆலய நிர்வாகம் ஆற்றங்கரையில் வைத்து வைத்துள்ள 4 கூடாரங்களில் தனது சேவையை தன்னலம் கருதாமல் 12 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
அதே வேளையில் இந்த கூடார வளாகத்தில் மெய் அன்பர்கள் தங்கள் பூசையை நடத்திய பின்னர் சுத்தம் செய்யாமல் அப்படி பூஜை பொருட்களை ஆற்றங்கரையில் கை விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஆற்றங்கரை குப்பை கூளமாக காட்சியளிக்கிறது.
இதனையும் இந்து தர்ம மாமன்றத்தின் தொண்டர்களை வைத்து சுத்தம் செய்து ஆற்றங்கரை வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் அரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பக்தர் குளித்து விட்டு தங்களது காணிக்கைகளை எடுத்து செல்ல கோல சிலாங்கூர் நகராண்மை கழகம் குளியல் தொட்டியையும் அருகே அமைத்து கொடுத்துள்ளது.இந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் நடராசன் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளை விட இவ்வாண்டு அதிகமான பக்தர்கள் கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்துக்கு நேர்த்தி கடனை செலுத்த வருகின்றனர். இவ்வாண்டு குறைந்தது 1,500 பேருக்கு மேல் பால்குடம் எடுப்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
மேலும் தற்போது இந்துக்கள் தங்களது நேர்த்தி கடன்களை காவி உடை அணிந்து பண்பாட்டுடன் வருவது பாராட்டத்தக்கது. பல சமயங்களுடன் ஒற்றுமையாக வாழும் மலேசியாவில் இந்துக்கள் தங்கள் பண்பாட்டை முறையாக கடைபிடித்து இனத்திற்கும் மதத்திற்கும் நற்பெயரை ஈட்டி தருவதை நமது கடமையாக கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான ஜி.கெ.நடராசன் கேட்டுக் கொண்டார்.
படம்;- கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் முருகப் பெருமானுக்கு தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி விட்டு ஆலயத்தை விட்டு வெளியேறும் பக்தர்கள்.