ஷா ஆலம், மார்ச் 18- நாட்டின் பிரதமராகப் பதவியேற்றப் பின்னர் முதன் முறையாக தனது தலைமையிலான கெஅடிலான் கட்சியின் சிறப்பு பேராளர் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடுமையானத் தொனியில் அனல் பறக்க தனது கொள்கையுரையை ஆற்றினார்.
கோட்பாடுகளையும் மரியாதையையும் காக்க வேண்டும் என்பதற்காக கடநதாண்டு நவம்பர் மாதம் நாட்டின் முதன் தலைவராக பொறுப்பேற்றது முதல் இந்த நான்கு மாத காலத்தில் தாம் பொறுமை காத்து வந்ததாக அவர் சொன்னார்.
இது எனது களம். நான்கு மாதங்கள் நான் பொறுமையாக இருந்தேன். முறையாக உரையாற்றினேன். இன்று கெஅடிலான் கட்சியின் தலைவர் என்ற முறையில் உரையாற்றுகிறேன். கடுமையான சமிக்ஞையை இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். பிரதமரானவுடன் ஆழ்ந்து உறங்கி விடுவேன் என நினைக்க வேண்டாம். பூர்வீகம் எது என்பது எனக்குத் தெரியும் என்று மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 4,000 பேராளர்களின் பலத்தக் கரவொலிக்கிடையே அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு வரும் மிரட்டல், பேரணி மற்றும் பதவி பறிப்பு போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
நாட்டை அச்சுறுத்தக் கூடிய இன உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்றும் எதிர்க்கட்சியினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
நீங்கள் எங்களுக்கு சவால் விடுத்தால் இன நல்லிணத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிடுபொடியாக்குவதற்கு எங்களிடமுள்ள அனைத்து அதிகாரங்களையும் சக்தியையும் பயன்படுத்துவோம் என்று அவர் எச்சரித்தார்.
இன உணர்வுகளுக்கு தூபம் போடாதீர்கள், அந்த தீயில் எரிவது மக்கள்தான். நீங்கள் தனி விமானத்தில் பறந்து விடுவீர்கள் என்று அவர் மேலும் சொன்னார்.