புத்ராஜெயா, ஏப்ரல் 7: நாட்டின் சந்தையில் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் முயற்சியில் இடைத்தரகர்களை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.
இன்று பஜார் ரம்லான், பிரின்சிட் 3 வது பகுதியில் நடைபெற்ற அக்ரோ ரஹ்மா விற்பனைத் திட்டத்தில் கலந்து கொண்ட அவர், இடைத்தரகர்கள் நியாயமான லாபத்தைப் பெற்றால் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.
அக்ரோ ரஹ்மா விற்பனையில் உள்ள பொருட்களின் விலையை உதாரணமாக எடுத்துக் கொண்டால், இடைத்தரகர்கள் ஊடுரவல் இன்றி விற்பனை செய்வதால் காய்கறிகள் மற்றும் ஈரமான பொருட்களின் விலைகள் விலை குறைவாக உள்ளது என்றார்.
“பச்சைக் காய்கறிகள் விலை குறைவாக இருப்பதை பார்க்கிறோம், ஏனென்றால் அவை அதீத லாபத்துடன் இடைத்தரகர்கள் மூலம் செல்லவில்லை. அதனால் சாதாரண சந்தையை விட விலை மிகவும் குறைவு.
“பழம், மீன், இறால் போன்ற பிற உணவுப் பொருட்களின் விலையும் இதுதான்.. இடைத்தரகர்களின் பங்கைக் குறைத்தால் அல்லது இடைத்தரகர்கள் நியாயமான லாபம் எடுத்தால், விலையை கட்டுப்படுத்த முடியும்,” என்றார்.
இடைத்தரகர்களை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சி குறித்த கேள்விக்கு, உழவர் சந்தைகள் மற்றும் அக்ரோ ரஹ்மா திட்டம் ஆகியவை பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நடைமுறைப் படுத்தப்பட்ட அணுகுமுறைகளில் அடங்கும் என்றார்.
“பண்ணையில் இருந்து விளைந்த பொருட்களை நேரடியாக சந்தைக்கு கொண்டு வந்தால், விலை மிகவும் குறையும்… இறக்குமதி பொருட்களை கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உள்நாட்டு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும்,” என்றார்.
வர்த்தகர்களுக்கு அதிக லாபம் அளிக்கும் வகையில், 3வது பகுதியில் உள்ள ரமலான் பஜார் ஸ்டால்களுக்கான வாடகை ரிம 1,000 லிருந்து ரிம 850 ஆக குறைக்கப்படும் என்று அன்வார் அறிவித்தார்.
“இது (குறைப்பு) அவர்களுக்கு (வர்த்தகர்களுக்கு) அதிக லாபம் ஈட்ட வாய்ப்பளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
– பெர்னாமா