ECONOMYMEDIA STATEMENT

மின்னல் தாக்கி ஆடவர் மரணம்- வேலைக்குச் செல்லும் போது நேர்ந்த துயரச் சம்பவம்

ஷா ஆலம்,  மே 4 –  வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது   மின்னல் தாக்கியதால் மோட்டார்  சைக்கிளோட்டி ஒருவர் பலியானார்.

இந்த துயரச் சம்பவம்  கம்போங்  ஸ்ரீ சீடிங் சாலையில்   நிகழ்ந்தது.
உள்நாட்டைச் சேர்ந்த    50 வயதுடைய ஆடவர் நேற்று முன்தினம் மாலை 6.20
மணி அளவில் பந்திங்   பண்டார்  ஸ்ரீ  மக்கோத்தாவில் உள்ள  தொழிற்சாலைக்கு வேலைக்கு  சென்று கொண்டிருந்தபோது மின்னல்  தாக்குதலுக்கு உள்ளானார்.
ஸ்ரீ சீடிங் தேயிலை தோட்டம் அருகே ரிம்பாயு  பாலத்தை  கடந்த போது மின்னல் தாக்கியதால்  அந்த ஆடவர்  மோட்டார் சைக்கிளில்  இருந்து   கீழே விழுந்ததாக கோல லங்காட் மாவட்ட  போலீஸ் சூப்ரிண்டெண்டன் அகமது ரிடுவான் முகமது நோர் சாலே கூறினார்.

சாலையில் கிடந்த அந்த ஆடவரை பொதுமக்கள் மீட்டு சாலையோரம்
கிடத்தியதோடு  அம்புலன்சுக்கும் தகவல் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த  மருத்துவ பணியாளர்கள்   அவர் உயிரிழந்து
விட்டதை உறுதிப்படுத்தினர் என்றார் அவர்.

அந்த ஆடவரின் கழுத்தில் வீக்கமும் வயிறு மற்றும் தொடையில் மின்னல்
தாக்கியதற்கான அறிகுறி தென் பட்டதோடு மோட்டார் சைக்கிளிலிருந்து
விழுந்ததால் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருந்தன அவர் மேலும்
சொன்னார்.

சம்பவ இடத்தை சோதனையிட்டதில் சாலையில் மின்னல் தாக்கியதற்கு
அடையாளமாக இரு பள்ளங்கள் காணப்பட்டன என்றார் அவர்.


Pengarang :