ஷா ஆலம், மே 6- வார இறுதியி கோல லங்காட் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொள்ள பொது மக்களுக்கு மந்திரி புசார் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி நிகழ்வு அறுசுவை உணவுகளை ருசிப்பதற்குரிய வாய்ப்பினையும் ஒருவரோடொருவர் நட்பு பாராட்டுவதற்குரிய சூழலையும் வழங்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
உங்கள் மாவட்டத்தில் அல்லது வீட்டிற்கு அருகில் நடைபெறும் இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பிக்கும்படி பொது மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இந்த பெருநாள் உபசரிப்பு பாயா ஜெராஸ் இரவுச் சந்தை பகுதியில் நாளை காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையிலும் சிஜாங்காங், தாமான் பெர்வீராவில் இரவு 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் நடைபெறும் என்று அவர் சொன்னார்.
இன்று சனிக்கிழமை உலு லங்காட், தாமான் ஸ்ரீ நண்டிங் அகோரா இரவு சந்தை பகுதியில் இரவு 8.00 மணி முதல் 11.00 மணி வரை இந்த விருந்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இது தவிர இம்மாதம் 12ஆம் தேதி சபாக் பெர்ணம், டத்தாரான் தானா லேசேன் பகுதியிலும் 13ஆம் தேதி கோல சிலாங்கூர் பொது மைதானத்திலும் 14ஆம் தேதி ஆப்டவுன் ஸ்ரீ கோம்பாக்கிலும் இந்த உபசரிப்பு நிகழ்வு நடைபெறும். ஸ்ரீ கோம்பாக்கில் நடைபெறும் விருந்து நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹம் கலந்து கொள்வார்.
இந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு தொடரின் முதல் மூன்று நிகழ்வுகள் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி சிப்பாங், உலு சிலாங்கூர் மற்றும் கிள்ளானில் நடைபெற்றன.