கிள்ளான்,மே 6- மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதில்வேலை வாய்ப்பு சந்தைகள் முக்கிய பங்காற்றுகிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார். மனிதவள அமைச்சின் ஆதரவோடு சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சி அல்லது வேலை வாய்ப்பு சந்தை மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது. தொழிலாளர் சந்தையில் பொதுமக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க அரசாங்கம் எப்போதும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் சொன்னார். அந்த வகையில் மனித வள அமைச்சு தற்போது சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மாநில அரசுகள் மூலம் 2023 பட்ஜெட்டில் பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். வேலையின்மை விகிதத்தைக் குறைத்தல் மற்றும் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிப்பது போன்றவற்றின் அடிப்படையில் வேலை வாய்ப்பு சந்தை சமூகப் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிலாங்கூரில், 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காம் காலாண்டுகளில் வேலையின்மை விகிதம் 3.6 சதவிகிதம் மற்றும் 2.9 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டின் அதே இரு காலாண்டுகளில் வேலையின்மை விகிதம் 3.2 சதவிகிதம் மற்றும் 2.9 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மலேசிய புள்ளியியல் துறையின் (DOSM) புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மலேசிய புள்ளியியல் துறையின் படி, 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை 75.9 தாக மிக உயர்ந்து பதிவு செய்த மாநிலங்களில் சிலாங்கூர் ஒன்றாகும் என்று அவர் சொன்னார். கிள்ளான் டேவான் அம்ஸாவில் மனிதவள அமைச்சு, சிலாங்கூர் மாநில அரசு மற்றும் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது மனிதவள அமைச்சர் சிவகுமார் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதிராவ், சொக்சோ தலைவர் டத்தோ ஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல், சொக்சோ இயக்குநர் டி கண்ணன் ஆகியோர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.