ஷா ஆலம், மே 7- ஊராட்சி மன்றங்களில் தங்கள் வர்த்தக நடவடிக்கையை பதிவு செய்வதில் தயக்கம் காட்ட வேண்டாம் என மாநிலத்திலுள்ள பொழுபோக்கு முகாம் நடத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வர்த்தக நடவடிக்கைகளை மூடவோ அல்லது அவர்களின் லைசென்ஸ்களை பறிமுதல் செய்யவோ அரசு திட்டமிடவில்லை என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
இத்தகைய பொழுதுபோக்கு முகாம்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த பதிவு நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்கிறது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அசம்பாவிதம் நிகழும் பட்சத்தில் விரைவாக உதவிகளை நல்கும் நோக்கில் பொழுதுபோக்கு முகாம் நடத்துனர்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். ஆனால், அமலாக்க அதிகாரிகள் தங்கள் இடங்களில் சோதனைகளை மேற்கொள்வர் என்ற அச்சத்தில் அவர்கள் அவ்வாறு செய்யத் தயங்குகின்றனர் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே அமலாக்க அதிகாரிகள் இத்தகைய மையங்களுக்கு வருவர். இடங்கள் பொருத்த மற்றவையாக இருக்கும் பட்சத்தில் வேறு இடங்களுக்கு மாற்றலாகும்படி அறிவுரை கூறுவார்களே தவிர லைசென்சை பறித்து வர்த்தகத்தை மூடும்படி உத்தரவிட மாட்டார்கள் என அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள செக்சன் யு12 பௌத்த ஆலயத்தில் நடைபெற்ற மாநில நிலையிலான விசாக தின கொண்டாட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுற்றுப்பயணிகளின் பாதுகாப்புதான் அரசுக்கு முக்கியம் என்ற நிலைப்பாட்டை பொழுதுபோக்கு மைய நடத்துனர்களுக்கு உணர்த்துவதற்காக வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் அத்துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.