ஷா ஆலம், மே 7- சுங்கை பூலோ, ஜாலான் பாருவில் பழுதடைந்த பகுதிகளை இன்ப்ராசெல் சென். பெர்ஹாட் கடந்த மாதம் 29ஆம் தேதி சீரமைத்தது.
மேலும், தஞ்சோங் சிப்பாட், கம்போங் உலு சுச்சோவில் உள்ள புக்கிட் பங்கோங் தீமோர் சாலையின் ஓரங்களை சீரமைக்கும் பணிகளையும் அந்நிறுவனம் இம்மாதம் 11 ஆம் தேதி மேற்கொண்டது.
பொதுமக்கள் டிவிட்டர் வாயிலாக அளித்த புகாரின் பேரில் 24 மணி நேரத்தில் இந்த பழுதுபார்ப்பு பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டது.
சாலைகளில் பழுது காணப்படும் பட்சத்தில் டிவிட்டர் வாயிலாக எங்களிடம் உடனடியாக புகார் அளியுங்கள் என்று அந்நிறுவனம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.
மாநிலம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள சாலைகளை மிகப்பெரிய அளவில் சீரமைக்கும் பணி இன்னும் இரு வாரங்களில் தொடங்கும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் நேற்று கூறியிருந்தார்.
சுமார் ஐந்து கோடி வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் இரு மாதங்களில் பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
சாலைகளில் சீரான பயணத்தை உறுதி செய்வதற்காக கடந்த 2021 முதல் இதுவரை மாநிலம் முழுவதும் 39,000 இடங்களில் சாலை பழுதுபார்ப்பு பணிகளை இன்ப்ராசெல் மேற்கொண்டுள்ளது.