செய்தி சு. சுப்பையா
தெலுக். ஏப்.7-பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, நேற்று கோல லங்காட் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிஜாங்காங் சட்டமன்ற தொகுதியில் கோல களமாக நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இந்த சிறப்பு உபசரிப்பு நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், தஞ்சொங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினருமான ஹஜி பொர்ஹான் பின் அமான் ஷா தலைமை தாங்கினார். பல்லின மக்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக வந்து கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மாலை 7.00 மணிக்கெல்லாம் மக்கள் குவிய தொடங்கினர். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று பல்லின மக்களும் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.