கோலாலம்பூர், மே 21- போக்குவரத்துக் குற்றங்களுக்காக வழங்கப்பட்ட சம்மன் களுக்கு குறைந்த பட்சம் 50.00 வெள்ளியை அபராதமாகச் செலுத்த வகை செய்யும் சிறப்புக் சலுகை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
அரச மலேசிய காவல்துறையினரால் (பி.டி.ஆர்.எம்.) சம்மன் வழங்கப்பட்ட வாகனமோட்டிகள் இந்த சலுகையை பயன்படுத்தி இன்றே அபராதத் தொகையை செலுத்தி விடும்படி உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
பி.டி.ஆர்.எம். குற்றப் பதிவுகளுக்கான அபராதம் செலுத்துவதற்கு சிறப்புச் சலுகை முடிவுக்கு வர இன்னும் ஒரு தினமே எஞ்சியுள்ளது. விரைந்து அபராதத்தை செலுத்துவீர் என அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
காவல் துறையின் போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 50.00 வெள்ளியாக குறைக்கும் சலுகை கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 21ஆம் தேதி வரை அமலில் உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட சம்மன்களுக்கு இந்த சலுகை பொருந்தும். இவ்வாண்டில் வெளியிடப்பட்ட மற்றும் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் சம்மன்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.