MEDIA STATEMENTSUKANKINI

பேராக், சிலாங்கூர் கால்பந்து ரசிகர்களிடையே மோதல்- நான்கு ஆடவர்கள் கைது

ஈப்போ, மே 21- இங்குள் பேராக் அரங்கில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் எப்.சி. மற்றும் பேராக் எப்.சி. குழுக்களுக்கிடையிலான கால்பந்தாட்டத்தின் போது ஆதரவாளர்களுக்கிடையே நிகழ்ந்த மோதல் தொடர்பில் 18 முதல் 26 வயது வரையிலான நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு 9.17 மணியளவில் நிகழ்ந்த அந்த மோதல் சம்பவத்தை வாட்ஸ்ஆப் எனும் புலனம் மூலம் பகிரப்பட்ட காணொளி வழி தாங்கள் உறுதிப்படுத்தியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் கூறினார்.

அந்த நால்வரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர்களில் ஒருவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கால்பந்து ரசிகர்கள் மத்தியில் நிகழ்ந்த இந்த மோதலை அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைதான நபர்களை குற்றவியல் சட்டத்தின் 147வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான ஆணை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று பெறப்படும் என அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள ஈப்போ அரங்கில் நேற்று நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தின் போது சிலாங்கூர் மற்றும் பேராக் குழு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :