ஷா ஆலம், மே 21- இங்குள்ள செக்சன் 18 பகுதியில் திடல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தரம் உயர்த்த 526,536 வெள்ளி செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக அப்பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளதாக பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
மொத்தம் 12,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த திடல் மேம்படுத்தப் பட்டுள்ளதோடு 464 மீட்டர் நீள நடைபாதை, ஓய்வெடுப்பதற்காக இருக்கைகள், கோல் கம்பம், கொடி கம்பம் உள்ளிட்ட வசதிகளும் இங்கு ஏற்படுத்தப் பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இங்குள்ள செக்சன் 18, ஜாலான் ரும்பியாவில் உள்ள அந்த கால் பந்தாட்டத் திடலின் திறப்பு விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று காலை நடைபெற்ற அந்நிகழ்வில் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மேம்பாட்டுப் பிரிவு துணைச் செயலாளர் யூனுஸ் சுரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த திடலை தரம் உயர்த்தும் பணிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முற்றுப் பெற்றதாக கூறிய ரோட்சியா, இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு சிலாங்கூர் மாநில அரசின் பொருளாதார திட்டமிடல் பிரிவு 200,000 வெள்ளியை வழங்கிய வேளையில் எஞ்சியத் தொகையை ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்றுக் கொண்டது என்றார்