ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பாகான் லாலாங் கடற்கரையில் நேர்ந்த துயரம்- இரு சிறுமிகள் நீரில் மூழ்கி மரணம், ஒருவரைக் காணவில்லை

புத்ராஜெயா, ஜூன் 5- சிலாங்கூர் மாநிலத்தின் பாகான் லாலாங் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இரு சிறுமிகள் நீரில் மூழ்கி மாண்ட வேளையில் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரைக் காணவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 2.34 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையம் கூறியது.

சிப்பாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து அறுவர் கொண்ட குழுவினர் 23 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக அம்மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரு சிறுமிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் காணப்பட்டனர். அவர்கள் உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின் தரப்பினர் உறுதிப்படுத்தினர் என்று அது குறிப்பிட்டது.

இச்சம்பவத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் இன்னும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் அவரைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காணாமல் போன நபரைக் கண்டு பிடிக்கும் பணியை மேற்கொள்வதற்காக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தில் நடவடிக்கை கட்டுப்பாட்டு சாவடியைத் திறந்துள்ளனர்.


Pengarang :