ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீ விபத்தில் 13 கொள்கலன்கள் சேதம்- கிள்ளான் துறைமுகத்தில் சம்பவம்

ஷா ஆலம், ஜூன் 8- இங்கு நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் அடங்கிய 13 கொள்கலன்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் கிள்ளான் துறைமுகத்திலுள்ள நோர்த் போர்ட் (மலேசியா) பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமான கொள்கலன் வைக்கும் பகுதியில் நேற்று காலை நிகழ்ந்தது.

இந்த தீ விபத்து தொடர்பில் காலை 10.14 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

ஒன்பது தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த ஐம்பது அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் 14 வண்டிகளில் சுமார் 13 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக  அவர் சொன்னார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த 40 அடி மற்றும் 20 அடி நீளம் கொண்ட 333 கொள்கலன்களில் 13 கொள்கலன்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தீயை அணைப்பது மற்றும் இதர கொள்கலன்களை அப்புறப்படுத்துவது  ஆகிய அணுகுமுறைகளை தீயணைப்பு வீரர்கள் கையாண்டதாக அவர் மேலும் சொன்னார்.

காலை 11.40 மணியளவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வேளையில் பிற்பகல் 2.20 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.


Pengarang :