ஜோகூர் பாரு, ஜூன் 8- இஸ்லாமிய மதம், அல்லாஹ் மற்றும் நபிகள் நாயகத்தை நிந்திக்கும் வகையிலான கருத்துகளை தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்ட குற்றத்திற்காக ஆடை வியாபாரி ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அலிமுடின் முகமது ஹயாத் (வயது 39) என்ற அந்த நபருக்கு எதிராக இங்குள்ள இரு நீதிமன்றங்களில் மொத்தம் 10 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நீதிபதி டத்தோ அகமது கமால் அரிபின் இஸ்மாயில் முன்னிலையில் ஆறு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி வி.எம். மேபல் ஷீலா முன்னிலையில் நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்கியுள்ளார்.
மற்றவர்களின் மனம் புண்படும்படி இஸ்லாமிய சமயம், அல்லாஹ் மற்றும் நபிகள் நாயகம் குறித்த நிந்தனைக் கருத்துகளை “அலி திக்குஸ்“ எனும் தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டதாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி லார்கின் பொது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அலிமுடின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.