ஷா ஆலம், ஜூன் 8- வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் வாகனம் இல்லா தின கொண்டாட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு பொது மக்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
“அதிக குதூகலம், அதிக பல்வகை“ எனும் கருப்பொருளிலான இந்த வாகனம் இல்லா தினத்தில் அவிஷேனா நிபுணத்துவ மருத்துவமனையின் உதவியுடன் சுகாதார பரிசோதனை உள்பட குடும்பத்துடன் பங்கேற்க கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவுத் தலைவர் முகமது அஸார் முகமது ஷாரிப் கூறினார்.
இந்த நிகழ்வையொட்டி 5 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயம், படகோட்டம், செனம்ரோபிக், ஜூம்பா, அம்பு எறிதல், சீலாட் கிளினிக், கலைப்பட்டறை, விளையாட்டுக் கூடாரம் உள்பட பல்வேறு அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
மேலும் இந்த வாகனம் இல்லா தினத்தில் இகோ ஃப்ரி மார்க்கெட் எனும் அங்கமும் இடம்பெறவுள்ளது. பயன்படுத்தப்பட்ட பொருட்களை இலவசமாக வழங்கும் மற்றும் பெறும் நோக்கில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இது தவிர, கனிம நீர் போத்தல், கண்ணாடி போத்தல், அலுமினியம் டின், பழைய செய்தித் தாள்களை ஒப்படைப்பின் மூலம் கூப்பன்களைப் பெற்று அதற்குரிய பரிசுகளை பெறுவதற்குரிய வாய்ப்பும் இங்கு வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.