NATIONAL

பெண் வாகனமோட்டியைத் தலைக்கவசத் தொப்பியால் தாக்கிய ஆடவர் கைது

பாலிக் பூலாவ், ஜூன் 10- பெண் வாகனமோட்டி ஒருவரை தலைக்கவசத்
தொப்பியால் தாக்கி காயப்படுத்திய ஆடவர் ஒருவரை போலீசார் கைது
செய்துள்ளனர்.

பினாங்கு, ஜாலான் பெர்மாத்தாங் டாமார் லாவுட்டில் கடந்த
வியாழக்கிழமை நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான
காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டியை
நேற்று தாங்கள் கைது செய்ததாகப் பாராட் டாயா மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிஸால் கூறினார்.

விபத்து ஏற்படக் காரணமாக இருந்த அந்த பெண் வாகமோட்டியின்
செயலால் சினமடைந்த அந்த நபர் அவரை தலைக்கவசத் தொப்பியால் தாக்கியது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர்
தெரிவித்தார்.

கைதான அந்நபர் குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ்
விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தகவல் அறிந்தவர்கள்
பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 04-8662222 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டர்.

அந்த மோட்டார் சைக்கிளோட்டி பெண்மணி ஒருவரிடம் கடுமையாக
நடந்து கொள்வதோடு அவரை தலைக்கவசத் தொப்பியால் தாக்கும் 14 விநாடி
காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.


Pengarang :