கோம்பாக் ஜூன் 18- குவாங் தொகுதியில் இதுவரை 35 முறை நடத்தப்பட்ட மாநில அரசின் மலிவு விற்பனையின் வழி தொகுதியில் உள்ள குறிப்பாக, குறைந்த வருமானம் பெரும் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.
இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஹஜ் பெருநாள் கொண்டாட்டத்தின் போது இத்தொகுதியில் மறுபடியும் இத்தகைய ரஹ்மா மலிவு விற்பனைகளை நடத்த சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்திடம் தங்கள் பேச்சு நடத்தி வருவதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் சலசியா டிசா கூறினார்.
ஹஜ் பெருநாளுக்கு சில தினங்கள் முன்னர் இங்கு மலிவு விற்பனை நடத்துவதற்கு நாங்கள் பி.கே.பி.எஸ். தரப்பிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எனினும், அவர்களிடமிருந்து பதிலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் என்றார் அவர்.
பெருநாளுக்கான ஏற்பாடுகளை கவனிப்பதில் பொதுமக்களுக்கு ஏற்படும் செலவுகளை குறைப்பதற்கு ஏதுவாக இத்தகைய மலிவு விற்பனை களை மேலும் சில இடங்களில் நடத்த முடியும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.
குண்டாங். தாசேக் பீரு மேடான் செலேராவில் இன்று நடைபெற்ற குவாங் தொகுதி நிலையிலான ஏசான் ரஹ்மா மலிவு விற்பனையின் போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த மலிவு விற்பனையில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோழி, இறைச்சி, அரிசி, மீன், போன்ற பொருட்களை வாங்கினார். கடந்தாண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களுக்கு நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையின் வழி மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 20 லட்சம் பேர் பயனடைந்தனர். இக்காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 60 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் விற்பனை ஆகின.