ஷா ஆலம், ஜூன் 24- வரும் மாநிலத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுப்பதற்கு முன்னர் தனது நிர்வாகத்தின் அடைவு நிலையை தாங்களாகவே சுயமதிப்பீடு செய்து கொள்ளும்படி சிலாங்கூர் மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநிலத்தில் சமூகவியல் பொருளாதாத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும்படி வரும் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பொது மக்களை அவர் வலியுறுத்தினார்.
மாநில சட்டமன்றம் நேற்று கலைக்கப்பட்டதையொட்டி நடத்தப்பட்ட அரசு ஊழியர்களுடனான இறுதி சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அமிருடின், தனது நிர்வாகம் தவறுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டது அல்ல என்பதையும் ஒப்புக் கொண்டார்.
இருந்த போதிலும், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக அது தனது பணித்திறனை மேம்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசு நிர்வாகத்தின் செயல் திறன் மற்றும் அடைவுநிலையை மதிப்பிடுங்கள். சுய பிரதிபலிப்புக்கு முக்கியத்தும் தரும் மற்றும் தவறுகளை திருத்திக் கொள்ள முனையும் அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள் என்றார் அவர்.
நாம் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் மற்றும் அவற்றைத் திருத்திக் கொள்ளும் அரசாங்கமாக நாம் தொடர்ந்து இருந்து வருகிறோம். தவறுகளைத் தொடர்ந்து புரியக்கூடிய ஆணவம் மிகுந்த அரசாங்கமாக நாம் ஒருபோதும் இருந்ததில்லை. எங்கள் அரசு நிர்வாகத்தில் ஆணவப் போக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.