செலாயாங், ஜூன் 27- இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 5
கோடியே 3 லட்சத்து 90 வெள்ளி வரியை செலாயாங் நகராண்மைக் கழகம்
வசூலித்துள்ளது.
இவ்வாண்டில் அந்த நகராண்மைக் கழகம் வசூலிக்க வேண்டிய 5 கோடியே
70 லட்சம் வெள்ளி வரித் தொகையில் இது 88.41 விழுக்காடாகும் என்று
நகராண்மைக் கழகத் துணைத் தலைவர் அடி ஃபைசால் அகமது தர்மிஸி
கூறினார்.
இக்காலக்கட்டத்தில் நிலுவையில் இருந்த 69 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி
வரியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக இங்குள்ள எம்.பி.எஸ். தலைமையகத்தில்
நடைபெற்ற நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் அவர்
தெரிவித்தார்.
இன்னும் வசூலிக்கப்படாமல் இருக்கும் 1 கோடியே 20 லட்சம் வெள்ளி வரி
பாக்கியில் இது 58.10 விழுக்காடாகும் என அவர் மேலும் சொன்னார்.
மைஎம்பிஎஸ் செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட 1,091
பரிவர்த்தனைகள் மூலம் வெ.637,107.95 வரி வசூலிக்கப்பட்டத் தகவலையும்
அவர் வெளியிட்டார்.
மைஎம்பிஎஸ் செயலியைப் பயன்படுத்தி லைசென்ஸ் கட்டணம், கடை
வாடகை மற்றும் கட்டிட பெர்மிட் தொகையை செலுத்துவது மற்றும்
சரிபார்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்படி பொது மக்களை அவர்
கேட்டுக் கொண்டார்.