ஷா ஆலம், ஜூலை 19- டத்தோஸ்ரீ சனுசி முகமது நோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாம் எந்த புகாரையும் போலீஸ் துறையிடம் தெரிவிக்கவில்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அந்த பாஸ் கட்சித் தலைவரின் செயல் வரம்பு மீறியதாகவும் ஆட்சியாளரை அவதிக்கும் வகையிலும் இருந்த போதிலும் சிலாங்கூர் அரச மன்றத்தின் புகாரை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது என்று அமிருடின் சொன்னார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை நிந்தனை செய்த காரணத்திற்காக சனுசி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்பில் சிலாங்கூர் அரச மன்றம் கடந்த 14ஆம் தேதி போலீசில் புகார் செய்தது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பெரிக்கத்தான் நேஷனல் தேர்தல் தலைமை இயக்குநருமான சனுசியின் இத்தகையச் செயல் வழக்கமான ஒன்று எனத் தாம் கருதுவதாகவும் அவர் சொன்னார்.
மாநிலத் தேர்தல் முடியும் வரை மலாய் ஆட்சியாளர்களின் அமைப்பு முறை மற்றும் மக்களின் நல்லிணக்கத்தை தொடர்ந்து கட்டிக் காத்து வரும்படி அனைத்து தரப்பினரையும் குறிப்பாக அரசியல்வாதிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
பிரசாரத்தை ஆரோக்கியமான முறையில் மேற்கொள்ளுங்கள். அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள். மக்களின் நல்லிணக்கத்தை சிதைக்க வேண்டாம். மாநில சுல்தானையும் மக்களையும் ஏளனம் செய்ய வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.