கோல சிலாங்கூர், ஆக 5- மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படும் மீனவர் சங்கத்தில் உறுப்பினர் ஆவதில் பிரச்சனையை எதிர்நோக்குவர் விஷயத்தில் புக்கிட் மெலாவத்தி தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் தீபன் சுப்பிரமணியம் தீவிர கவனம் செலுத்த இருக்கிறார்.
இம் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்றால் இவ் விவகாரத்திற்கு தீர்வு காண தாம் உறுதி பூண்டுள்ளதாக 35 வயதான தீபன் சொன்னார்.
உறுப்பினர் அந்தஸ்து இல்லாத காரணத்தால் மாநில மற்றும் மத்திய அரசுகளின் சலுகைகள் அவர்கள் பெற முடியாமல் போவதைக் கருத்தில் கொண்டு இவ்விவகாரத்தில் தாம் தீவிர கவனம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புக்கிட் மெலாவத்தியில் சுமார் 60 விழுக்காட்டு மீனவர்கள் மீனவர் சங்கத்தில் உறுப்பியம் பெறவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு இவ் விவகாரத்திற்கு உரிய தீர்வு காண்பேன் என்றார் அவர்.
பலர் மீனவர்கள் சங்கத்தில் உறுப்பியம் பெறாமல் போனதற்கு நிர்வாக நடைமுறை காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மத்தியஸ்தராக இருந்து சுமூகமான தீர்வு காண்பதற்கு முயற்சி செய்வேன் என்று தஞ்சோங் கிராமாட் படகுத் துறையில் மீனவர்களுடன் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் நோராஸ்லி யாஹ்யாவிடமிருந்து தீபன் நேரடிப் போட்டியை எதிர் நோக்குகிறார்.