ஷா ஆலம், ஆக 31- நாளை தொடங்கி வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கடல் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கும்படி பொது மக்கள் குறிப்பாக கோல சிலாங்கூர் வட்டார குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இக்காலக்கட்டத்தில் இப்பகுதியில் கடலில் நீர்மட்டம் 5.6 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக கோல சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம் கூறியது.
நாளை அதிகாலை 6.58 முதல் காலை 7.08 வரை கடல் மட்டம் 5.5 மீட்டர் வரை உயரும் என்று மாவட்ட அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் பெருக்கு தொடர்பான தகவல்கள் அல்லது புகார்களுக்கு 03-32897632 என்ற எண்களில் கோல சிலாங்கூர் நில/மாவட்ட அலுவலகத்தின் பேரிடர் நடவடிக்கை அறையை பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
இதனிடையே நாளை காலையும் மாலையும் சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்றும் இரவில் வானிலை நன்றாக இருக்கும் என்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.