கோலாலம்பூர், ஆக 31 – இந்நாட்டில் பிரிவினைகள் ஏற்படுவதற்கு தாய் மொழிப் பள்ளிகள் காரணமல்ல. மாறாக, துன் டாக்டர் மகாதீர் முகமது போன்ற அரசியல்வாதிகளே முழு பொறுப்பாகும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.
தேசிய பள்ளிக் கொள்கையின் ஒரு பகுதியாக தாய்மொழிப் பள்ளிகள்
விளங்கும் நிலையில் அப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்பது போன்ற நிந்தனையான கருத்துகளை மகாதீர் போன்ற தலைவர்கள் வெளியிட்டு வருவது வருத்தமளிப்பதாக உள்ளது அவர் சொன்னார்
தேசிய ஒருமைப்பாட்டிற்கு எந்தவகையிலும் மதிப்பை கொண்டுவராத இனத்துவேச அறிக்கைகளை வெளியிடுவதை டாக்டர் மகாதீர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு நாடு 66 ஆவது தேசிய தின கொண்டாட்டத்தை கொண்டாடும் இவ்வேளையில் மலாய்க்கார்கள் அல்லாதவர்களை “வந்தேறிகள் ” என கூறுவதையும் டாக்டர் மகாதீர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மித்ராவின் சிறப்பு பணிக்குழுவின் தலைவருமான ரமணன் வலியுறுத்தினார்.
டாக்டர் மகாதீர் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை நேரடியாக சென்று பார்வையிட வேண்டும். இதன்வழி தாய்மொழிப் பள்ளிகள் அவர்களது பாடத் திட்டங்களில் தேசிய ஒற்றுமைக்கு ஆற்றி வரும் பங்கை அவர் நேரடியாக அறிந்து கொள்ள முடியும் அவர் சொன்னார்.
தாய்மொழிப் பள்ளிகளின் செயல்பாட்டினால் தமிழ் மற்றும் மாண்டரின் மொழிகளை மலேசியர்கள் கற்றுக்கொள்ள முடியும். நமது மாணவர்கள் மற்றமொழிகளை கற்றுக்கொள்வது அவர்களுக்கு மிகப்பெரிய சொத்தாகவும் இருக்க முடியும்.
தாய்மொழிப் பள்ளிகளுக்கு கூட்டரசு அரசாங்கம் நிதி வழங்கி வருகிறது, தனியார் பள்ளிகளைப் போன்று நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு சீன தொடக்கப் பள்ளிகளில் 100,000 த்திற்கும் மேற்பட்ட மலாய்க்கார, இந்திய மற்றும் இதர பூமிபுத்ரா மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
ஆறு ஆண்டுகள் தொடக்கக் கல்விக்கு மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்பி வைப்பதற்கு ஒரே காரணம் அவர்களது பிள்ளைகள் மெண்டரின் அல்லது தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பயில வேண்டும் என்பதுதான் . தாய்மொழிப் பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு சீர்குலைவை ஏற்படுத்தவில்லை. டாக்டர் மகாதீர் போன்ற அரசியல்வாதிகள்தான் தேசிய ஒன்றுமைக்கு பிளவை ஏற்படுத்துகின்றனர் என்றும் ரமணன் தெரிவித்தார்.
சீனாவும் இந்தியாவும் பெரிய பொருளாதார நாடாக இருக்கின்றன. நமது பிள்ளைகள் மாண்டரின் மற்றும் தமிழ் மொழியில் பேசக்கூடிய ஆற்றலை கொண்டிருந்தால் அவர்கள் வேலை வாய்ப்பு சந்தையில் சிறந்த வாய்ப்புக்களையும் பெறமுடியும் என ரமணன் தெரிவித்தார். நமது பள்ளிகளில் பகாசா மலேசியாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
செய்தி ரீதியில் தாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து விஷயங்களையும் இன ரீதியில் டாக்டர் மகாதீர் பார்ப்பதுதான் துரதிர்ஷ்டம் ஆகும். இனங்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக மலேசியர்களை ஒன்றிணைக்கும் பங்கை 98 வயதுடைய மகாதீர் ஆற்ற வேண்டும் என ரமணன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.