புத்ரா ஜெயா, செப்.1- மனிதவள அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் நயோஷ் எனப்படும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் வழி பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலை இடங்களில் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்கு இதுபோன்ற பயிற்சிகள் முக்கியமாக விளங்கி வருகிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.
இந்திய இளைஞர்கள் இந்த துறையில் அதிகமாக ஈடுபட மனிதவள அமைச்சு பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பிரதமர் துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய உருமாற்ற கழகம் (மித்ரா) – வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகம் இணைந்து இந்தியர்களுக்கான பிரத்தியேகமாக மித்ரா –
நயோஷ் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் நான்கு வெவ்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அதில் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரி, பயிற்றுனருக்கான பயிற்சி, வேலையிட பாதுகாப்புமற்றும் சுகாதார ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொக்லிப்டு ஓட்டுநருக்கான பயிற்சிகள் ஆகும்.
இந்த பயிற்சி 9 நாள் முதல் 30 நாட்கள் மட்டுமே. கடந்த ஆண்டு 170 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இம்முறை 790 மாணவர்கள் பயில்வதற்கு 36 லட்சம் வெள்ளி ஒதுக்கப் பட்டிருப்பதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
இந்த பயிற்சிகள் தொழில் துறைகளுக்கு தேவையான பல்வேறு இதர பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன
மேலும் இப்பயிற்சியில் பங்கேற்கும் பயிற்சியாளர்களுக்கு தங்கும் இடம், உணவு மற்றும் பயிற்சி கொடுப்பனவு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சிகளில் பங்கேற்கும் பயிற்சியாளர்கள் எரிபொருள், உற்பத்தி, கட்டுமானம், பொறியியல், மின்சாரம் , தொலைத்தொடர்பு போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றலாம் .
இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சிகளில் இந்திய இளைஞர்கள் அதிகமானோர் பங்கு பெற்று பயன் அடையலாம் என்றார் அவர். ஆர்வம் உள்ள இளைஞர்கள் நயோஷ் வெப்சைட் மூலம் தங்களை பதிவு செய்துக் கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.